பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தை இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 500 பேர் நேற்று முற்றுகையிட்டனர்.
அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. அதில் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று கோரி இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள 500 பேர் நேற்று காலை ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டனர். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே. சவுத்திரி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை.
அதற்கு பின்னர் அவர்கள் நேற்று மாலை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதாவை சந்தித்தனர்.
அப்போது, ‘சம்பந்தப்பட்ட பாடங்கள் தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் உள்ள தவறுகள், குழப்பங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்’ என்று செயலாளர் சபீதா தெரிவித்தார்.
போராட்டம் குறித்து கே.கே.ரவி கூறியதாவது:
கடந்த 1993ம் ஆண்டு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் நாங்கள் படித்தோம். அது செல்லாது என்று அப்போதைய அரசு அறிவித்தது. அதனால் நாங்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டோம்.
பின்னர் 2002ம் ஆண்டு எங்களை மீண்டும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்த்து படிக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி 2004ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நாங்கள் முடித்தோம். தனியாரில் 2 ஆண்டு, அரசு பள்ளியில் 2 ஆண்டு என நாங்கள் நான்கு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சியை படித்தோம். இதன்பிறகும் எங்களுக்கு ஏன் தகுதித்தேர்வு ஏன் வைக்கிறார்கள்?
தகுதி தேர்வு நாங்கள் எழுத தயார்தான். ஆனால், அரசு அறிவித்தபடி 1 முதல் 5ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை. தேர்வில் இடம் பெற்ற கணக்கு கேள்விகள் சில மிகவும் கடினமாக இருந்தன. இவை அனைத்தும் 8ம் வகுப்பு கணக்கு புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டன. மேலும் சைக்காலஜி பாடத்தை பொறுத்த வரை 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான பாடங்களில் இருந்து கேட்போம் என்று அறிவித்தார்கள். ஆனால் பட்டப் படிப்பில் உள்ள சைக்காலஜியில் இருந்து கேட்டுள்ளனர். ஆங்கிலப் பாடத்தில் பத்தி அளவில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதை படித்து பார்க்க நேரம் போதவில்லை. மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் 32 செகண்டில் விடை அளிக்க வேண்டும் என்ற அளவில் 90 நிமிடம் ஒதுக்கி இருந்தார்கள். இந்த கால அளவில் யாராலும் விடை அளிக்க முடியாது. கேள்வி தயாரித்த ஆசிரியர்களாலேயே முடியாது.
ஆந்திர மாநிலத்தில் தகுதித் தேர்வு நடத்திய போது 2.30 மணி நேரம் கொடுத்தார்கள். ஆனால் தமிழகத்தில அதே தேர்வுக்கு ஒன்றரை மணி நேரம் ஒதுக்கியுள்ளார்கள். எல்லாம் சட்டப்படிதான் என்றால் நேர வித்தியாசம் எப்படி வந்தது. எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தக் கூடாது. பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு ரவி தெரிவித்தார்.
நள்ளிரவு வரை இந்த போராட்டம் நீடித்தது.
பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் கோரி
ஆசிரியர் தேர்வு வாரியம் முற்றுகை
தகுதித் தேர்வு விடைகள் வெளியீடு
தகுதித் தேர்வுக்கான கீ&ஆன்சர்கள் நேற்று மாலை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. கீ&ஆன்சரில் ஏதாவது பிழை இருந்தால் ஆதாரங்களுடன் 30ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். அந்த கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.